அழகன்குளத்தில் மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி கருத்தரங்கம்
ராமநாதபுரம் அருகே உள்ள அழகன்குளத்தில் முஸ்லீம் பொதுஜன சங்கம் சார்பில் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆலோசனைக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஜூம்மா பள்ளி வாசல் வளாகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக் கருத்தரங்கிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ந.ப.அசோகன் தலைமை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் அ.சடகோபால் துவக்கி வைத்தார். சங்கத் தலைவர் ஓ.ஏ.ஆர்.நூருல் அஹமது, முஸ்லிம் ஜமாஅத் தலைவர் எஸ்.காஜாமைதீன், இந்து சமூகத் தலைவர் என்.சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.முகமது ரபீக் அலி வரவேற்றார்.
செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியை திரிபுரசுந்தரி, இயற்பியல் ஆசிரியர் எம்.காஜா முகைதீன், கணக்குப் பதிவியல் ஆசிரியர் கே.சுல்தான் சலாகுதீன், நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் எஸ்.நவநீதகிருஷ்ணன், இரட்டையூரணி அரசு மேல்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர் சிதம்பரநாதன், அழகன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி விலங்கியல் ஆசிரியர் சத்தியமூர்த்தி ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.
கருத்தரங்கில், தேவிபட்டினம் புகாரியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம் நபீசா அம்மாள் மேல்நிலைப் பள்ளி, அழகன்குளம் நஜியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, அழகன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயிலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தினமணி 6-2-2011