ஆங்கிலத்தில் போதிய அறிவும், பேச்சு திறமையும் வேண்டும் - ஆஸ்திரேலியா

16/08/2010 10:34

மெல்போர்ன் :ஆங்கிலத்தில் போதிய அறிவும், பேச்சு திறமையும் இல்லாத இந்திய நர்சிங் மாணவியர், ஆஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.


ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றில் நர்சுகளின் தேவை அதிகம் உள்ளது. இந்தியா, சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நர்சிங் மாணவியர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிய சென்றுள்ளனர். ஆனால், போதிய ஆங்கில அறிவு இல்லாததால், அவர்களை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கு குறைந்தபட்ச ஆங்கில அறிவு போதாது என்று கூறி, அந்நாட்டு அரசு, விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, நர்சிங் மாணவியர் சர்வதேச ஆங்கில அறிவு பரிசோதனை முறையில் குறைந்தப்பட்சம் 6.5 புள்ளிகள் பெற வேண்டுமென நர்சிங் மற்றும் மகப்பேறு மைய வாரியம் தெரிவித்துள்ளது. அதாவது, அம்மாணவியர் ஆங்கில பேச்சு திறமையில் அதிகபட்ச அறிவை பெற்றிருக்க வேண்டும்.இந்த அதிரடி நடவடிக்கையால், இந்திய மாணவியர் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த, 400 நர்சிங் மாணவியர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவியருக்கு, "ஆஸ்திரேலிய நர்சிங் கூட்டமைப்பு' ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.


ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, பிரிட்டனும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பிரிட்டனின் வசிப்பதற்கோ அல்லது பணிபுரிவதற்கோ ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமென அந்நாடு தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிரிட்டனில் வேலை விசா பெறவோ அல்லது குடியுரிமை பெறவோ முடியும்.