இந்த ஆண்டு மருத்துவ நுளைவுத்தேர்வு இல்லை - பொன்முடி
''தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு இருக்காது'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் சி.வி. சண்முகம் , மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் எனவே மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று முதலமைச்சர் கருணாநிதி மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார் என்றார்.
அண்மையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர் கபில் சிபல், நுழைவுத் தேர்வு வராது என்று உறுதி அளித்துள்ளார் என்று கூறிய பொன்முடி, எனவே இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு இருக்காது என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய சி.வி.சண்முகம், மத்திய அரசின் நுழைவுத் தேர்வு தொடர்பான சட்டத்தை திரும்பப் பெற ஏன் தமிழக அரசு வற்புறுத்தவில்லை என்று வினா எழுப்பினார்.
இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பதில் அளிக்கையில், மாநில அரசை கலந்து பேசாமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் உறுதி அளித்துள்ளார் என்றும் நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.
வெப்துனியா 10-02-2011