இமாம்கள் சம்பளம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த அரசு உறுதி
அரசு உதவி பெறும் மசூதிகளின் இமாம்களுக்கான சம்பளம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
மக்களவையில், இதுதொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துப் பேசியபோது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இவ்வாறு உறுதியளித்தார்.
அரசு சம்பளம் பெறுவது தொடர்பாக இமாம்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் பேசியபோது அவையில் கூச்சல் எழுந்தது.
இதனிடையே, அகில இந்திய இமாம்கள் அமைப்பு தான் இப்பிரச்னையில் உச்சநீதிமன்றத்தை அணுகியது என்று லாலு தெரிவித்தார்.