இரண்டு குழந்தைகளுடன் தாய் கொலை : கள்ளக்காதலர்கள் மோதல் காரணமா?

12/11/2010 10:39

 

மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே ராமநாதபுரத்தை சேர்ந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கள்ளக்காதலர்களின் மோதல் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஆதிலாபானு(24). இவர் குப்பான்வலசையைச் சேர்ந்த முத்து மகன் முத்துச்சாமியை காதலித்து திருமணம் செய்தார். இதற்கு சாத்தான்குளத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் குப்பான்வலசையில் குடியேறினர். முத்துச்சாமி மதம் மாறி, அகமது என, பெயரை மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு முகமது அஸ்லம்(7) அஜிராபானு(5) என்ற குழந்தைகள் உள்ளனர்.


வேலைக்காக முத்துச்சாமி மலேசியா சென்ற நிலையில், ஆதிலாபானுவுக்கு சிலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கணவன், மனைவி இடையே மனகசப்பு ஏற்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன், தாய் ஹம்சத்நிஷா மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் பாரதிநகரில் ஆதிலாபானு குடியேறினார். கடந்த நவ., 8ம் தேதி ஆதிலாபானு, குழந்தைகள் மாயமாகினர். ஹம்சத்நிஷா கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். விசாரணையில், தனது மகளுடன் தொடர்புள்ள சிலர் மீது சந்தேகிப்பதாக தெரிவித்திருந்தார்.

 

 

இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நான்குவழிச்சாலை மதுரை நோக்கிச் செல்லும் வழியில் கட்டக்குளம் பிரிவு தரைப்பாலத்தின் கீழ், நேற்று அரை நிர்வாண கோலத்தில் ஆதிலாபானு பிணமாக கிடந்தார். அருகே மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் பின்புறம் விராலிபட்டி பிரிவு பாலத்தின் கீழ், வெள்ளை வேட்டியில் சுருட்டி கட்டப்பட்ட நிலையில் குழந்தைகள் முகமது அஸ்லம், அஜிராபானுவின் உடல்கள் அழுகிய நிலையில் கிடந்தன. கேணிக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், பானுவின் தாயை அழைத்துக்கொண்டு வாடிப்பட்டி சென்றார்.

 

 

கொலை சம்பவத்தில், கள்ளக்காதலர்கள் இடையே ஏற்பட்ட மோதலே காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நான்கிற்கும் மேற்பட்டோர் பானுவுடன் தொடர்பு வைத்திருப்பதாக தெரிவதால், இதில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

 

 

கதறி அழுத காதல் கணவர் : மனைவி, குழந்தைகள் இறந்த தகவலை மலேசியாவில் உள்ள முத்துச்சாமிக்கு அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்ட அவர், போனில் கதறி அழுதுள்ளார். ""இறந்தவர்களை பார்க்கும் இடத்தில் கூட நான் இல்லையே,'' என, கதறியுள்ளார்.

 

 

மைனர் காதல் மங்கியது : தனது 16வது வயதில் வேறுபிரிவை சேர்ந்த முத்துச்சாமியை ஆதிலா பானு காதலித்ததற்கு ஊரார் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மறைந்த மண்டபம் ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சீனிக்கட்டியின் கார் டிரைவராக முத்துச்சாமி பணியாற்றினார். சீனிகட்டியின் தாய் பசீர் அம்மாள் இவர்களது திருமணத்தை நடத்திவைத்தார். மைனர் வயதில் காதல் வசப்பட்ட ஆதிலா பானுவுக்கு, நாட்கள் கடந்த போது காதல் கசந்தது. கணவர் வேலைக்காக வெளிநாடு சென்ற சமயத்தில், பலருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

https://www.dinamalar.com/News_Detail.asp?Id=124503