உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

21/09/2011 23:02

"நடைபெற இருக்கும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை" என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத்தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

"சட்டமன்றத் தேர்தல் மாநில நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு நடத்தப்படுவதால் மாநில அளவில் முஸ்லிம் சமுதாயத்துக்குக் கிடைக்க வேண்டிய நன்மையைக் கவனத்தில் கொண்டு ஒரு அணியைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கின்றது. அது போல் நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டு மொத்த இந்தியாவை ஆளக்கூடியவர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படுவதால் இந்திய அளவிலோ, மாநில அளவிலோ முஸ்லிம் சமுதாய நலன் சம்மந்தப்பட்ட கோரிக்கை அடிப்படையில் ஒரு அணியைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கின்றது.

ஆனால் உள்ளாட்சி அமைப்பு என்பது உள்ளூர் நிர்வாகம் சம்மந்தப்பட்டதாகும். இந்தத் தேர்தலில் அனைத்து முஸ்லிம்களுக்குமான பொதுவான கோரிக்கை எதையும் வைக்க முடியாது என்பதால் உள்ளாட்சித் தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை என பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் நிலைபாட்டையே இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களிலும் தொடர்கின்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கலாம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் எந்த நிர்வாகிகளும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடமாட்டார்கள். உறுப்பினர்கள் கட்சி சாராமல் தனித்து போடியிடலாம். ஆனால் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத ஜமாத் பிரச்சாரம் செய்யாது.

எனவே தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பெயரையோ, கொடிகளையே எந்த வேட்பாளர்களும் பயன்படுத்த வேண்டாம் என்றும், மாவட்ட, கிளை நிர்வாகிகள் எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பிரச்சாரம், மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் மாநில தலைமை கேட்டுகொள்கின்றது."

என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

inneram.com