ஏகத்துவத்திற்க்கு இணையான மத்ஹபுச் சட்டங்கள்!

04/10/2010 15:04

அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்களே! தமிழகத்தல் ஏகத்துவவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் நஜாத்காரர்களின் செயல்களுக்கும், பாரம்பரிய மத்ஹபை பின்பற்றும் மத்ஹபுவாதிகளின் செயல்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் காணப்படுவதால், பெரும்பாலான தமிழ் முஸ்லிம்களுக்கு ஏகத்துவம் என்றாலோ அவர்கள் சார்ந்த இயக்கம் என்றாலோ அலர்ஜியாகிவிட்டது. அவர்களின் நடவடிக்கைகளும் செயல்களும் புதிதாக தெறிகிறது.

ஆனால் ஒரு கசப்பான உண்மை என்னவென்று சொன்னால் ஏகத்துவவாதிகளான குர்ஆன் மற்றும் ஹதீஸ் மட்டும்தான் மார்க்கம் என்பவர்களின் கருத்துக்களுக்கும் மத்ஹபுகளின் கருத்துக்களுக்கும் இடையே வணக்க வழிபாடுகளில் வெரும் 25 சதவீதம் மட்டுமே வித்தியாசம் உள்ளது. அதை விளக்குவதற்காகத்தான இந்தக் கட்டுரை நமது புதுவலசை.இன் இணையத்தில் இடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையின் மூலப்பக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

ஏகத்துவத்திற்க்கு இணையான மத்ஹபுச் சட்டங்கள்!

ஆலிம்கள் எந்த மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என உங்களுக்குப் போதிக்கிறார்களோ அந்த மத்ஹப் நூல்களில் உள்ள ஏராளாமான விசயங்களை உங்களுக்கு அவர்கள் சுட்டிக் காட்டாமல் மறைத்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் செய்திகள் மிகத் தெளிவான சான்றுகளாகும். 

மத்ஹப் நூற்களிலேயே பித்அத், தடுக்கப்பட வேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத் தான் உங்களோடு சேர்ந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல! மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.  

தராவீஹ் 20 ரக்அத்கள் என்பது பலவீனமான செய்தியாகும்

தராவீஹ் இருபது ரக்அத்கள் தான் தொழவேண்டும், எட்டு ரக்அத்களுக்கு ஆதாரங்கள் இல்லை, இதைச் செய்பவர்கள் புதுமைவாதிகள், குழப்பவாதிகள் என்று கூறி வரும் மத்ஹபுவாதிகள் பின்வரும் செய்தியைப் படித்து, தெளிவு பெறட்டும்.

நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் வித்ருத் தொழுகை உட்பட பதினோரு ரக்அத்துகளை விட அதிகமாகத் தொழுததில்லை. இது புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே இப்னு ஹுசைமா, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வாயிலாக இப்னு அபீ ஷைபா, தப்ரானி, பைஹகி போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ள, நபி (ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகை நீங்கலாக இருபது ரக்அத்துகள் தொழுதார்கள் என்ற செய்தி பலவீனமானதாகும். (ஹனபி மத்ஹப் நூல்: ஹாஷியா தஹ்தாவி, பாகம்: 1 பக்கம்: 269) 

தொழுகையில் நெஞ்சில் கைகட்டுதல்

தொழுகையில் நெஞ்சில் கை கட்டக் கூடாது, தொப்புளுக்குக் கீழ் அல்லது வயிற்றில் தான் கட்ட வேண்டும் என்று சொல்பவர்கள், மத்ஹப் நூல் என்ன சொல்கிறது என்பதை பார்க்கட்டும்.

இமாம் ஷாஃபி அவர்களிடத்தில் (தொழுகையில்) இரு கைகளை நெஞ்சின் மீது வைப்பது தான் சிறப்புக்குரியதாகும். நூல்: ஹிதாயாவின் விரிவுரை நூலான அல்இனாயா, பாகம்: 1, பக்கம்: 468. (இது ஹனஃபி மத்ஹப் நூலாகும்) 

இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: தொழக் கூடியவன் நெஞ்சில் கைவைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் நெஞ்சில் கைகளை வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் என்று அறிவிக்கப்படும் ஹதீஸ் இதற்குரிய ஆதாரமாகும்.

ஏனென்றால் நெஞ்சின் மீது கை வைத்தல் என்பது (தொப்புளுக்குக் கீழ்) மறைவுறுப்பின் மீது கை வைப்பதை விட இது பணிவிற்கு மிகவும் நெருக்கமானதாகும். நூல்: கன்ஸுத்தகாயிக் என்ற நூலின் விரிவுரை நூலான தப்யீனுல் ஹகாயிக் பாகம்: 1 பக்கம்: 107 (இது ஹனஃபி மத்ஹப் நூலாகும்)

வாயில் மொழியும் நிய்யத் இல்லை

தொழும் போதும், நோன்பு நோற்கும் போதும் வாயால் சில வார்த்தைகளை கூறி நிய்யத் செய்ய வேண்டும் என்று நடைமுறைபடுத்தி வரும் மத்ஹப்வாதிகள் இச்செய்தியை படிக்கட்டும்.

பொதுவாக அனைத்து வணக்கங்களிலும் நிய்யத்தை வாயால் மொழிதல் என்பது பித்அத்தான காரியமாகும். ஹனபி மத்ஹப் நூல்: அல்பஹ்ருர் ராயிக், பாகம்: 2 பக்கம்: 346

நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் ஆரம்பத்தில் நான் இவ்வாறு தொழகிறேன் என்று (நிய்யத்தை வாயால்) கூறுபவர்களாக இருந்தார்கள் என ஸஹீஹான, லயீஃபான எந்த ஹதீஸ்கள் வழியிலும் உறுதியாகவில்லை. மேலும் ஸஹாபாக்களிலும் தாபியீன்களிலும் ஒருவர் கூட இவ்வாறு செய்தார் என்றும் உறுதிப்படுத்தப்படவில்லைஎன்று சில சிறந்த ஹதீஸ் கலை வல்லுநர்கள் அறிவித்துள்ளதாக ஃபத்ஹுல் கதீர் என்ற நூலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹில்யா என்ற நூலில் நான்கு இமாம்களிடமிருந்தும் இவ்வாறு எடுத்துரைக்கப்படவில்லை என்றும், நபியவர்கள் தொழுகைக்காக நின்றால் அல்லாஹு அக்பர் என்று தான் கூறுவார்கள்என்ற விவரம் மேலதிகமாக இடம்பெற்றுள்ளது. ஹனபி மத்ஹப் நூல்: ஹாஷியது இப்னி ஆபிதீன், பாகம்: 1 பக்கம்: 416

பராஅத் இரவு இல்லை

மார்க்கத்தில் இல்லாத காரியங்களை நன்மை தரும் காரியமாகச் செயல்படுத்தி வரும் மத்ஹப்வாதிகள் மத்ஹப் நூல்களில் இடம் பெற்றிருக்கும் இந்தக் கருத்துக்களுக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?

ரஜப் மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப், இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும், ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு ரக்அத்துகள் சிறப்பாகத் தொழுவதும் பழிக்கப்பட வேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதைச் செய்பவனைத் தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். ஷாஃபி மத்ஹப் நூல்: இஆனா, பாகம்: 1 பக்கம்: 270

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும், ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும். ஷாஃபி மத்ஹப் (நூல்: ஃபத்ஹுல் முயீன், பாகம்: 1 பக்கம்: 270 ன், பாகம்: 1 பக்கம்: 270)

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். ஹனபி மத்ஹப் நூல்: அல் பஹ்ருர் ராயிக், பாகம்: 5 பக்கம்: 232

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! உங்கள் செயல்களைப் பாழாக்கி விடாதீர்கள்! அல்குர்ஆன் 47:33

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். அல்குர்ஆன் 33:36

திருக்குர்ஆன், மற்றும் நபி (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதல் ஆகிய இரண்டை மற்றும் பின்பற்றி வாழக்கூடியவன் தான் உண்மையான முஃமின் என்பதை மேற்கண்ட வசனங்கள் நமக்குப் போதிக்கின்றன. ஆனால் சத்தியத்தை மறந்து மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக்கிக் கொண்ட ஆம் பெருமக்களால் சமுதாயம் வழிகெடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மத்ஹபுகள் என்ற பெயராலும் தர்ஹா, தைக்காக்கள் என்ற பெயராலும் பல வகைகளில் வழிகெடுக்கின்றனர்.

ஓரிறைக் கொள்கைக்கு எதிரான தர்ஹா வழிபாடுகள் எல்லாம் உண்மையானதாகச் சித்தரிக்கப்பட்டு, இன்று இஸ்லாமிய சமுதாயம் நரகப் படுகுழிகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. யூத, நஸ்ரானிய அறிஞர்களைப் போன்று வயிற்றுப் பிழைப்புக்காக மார்க்கத்தைத் திரிக்கின்ற இந்த போலி மவ்லவிகள், மக்களை குருட்டுக் கூட்டங்களாய் மாற்றி வருகின்றனர். ஆனால் இவர்கள் எந்த மத்ஹபுகளைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுகிறார்களோ அந்த மத்ஹபுகளில் இடம் பெற்ற ஒரு சில சத்தியக் கருத்துக்களைக் கூட பின்பற்ற முன்வருவதில்லை.

குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாங்கள் கூறுகின்ற கருத்துக்களை நீங்கள் நம்பவில்லை என்றாலும் நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள மத்ஹபு நூல்களில் இடம் பெற்றுள்ள கருத்துக்களையாவது அறிந்து, இந்த வழிகெடுக்கும் மவ்லவிகளை விட்டும், இணை வைக்கக் கூடிய காரியங்களை விட்டும் தவிர்ந்து கொள்வீர்கள் என்ற நன்னோக்கத்தில் இக்கருத்தை உங்கள் முன்னர் வைக்கின்றோம்.

கப்ரை பூசுவதும், அதன் மீது கட்டிடம் எழுப்புவதும்

கப்ரை பூசுவதும், அதன் மீது கட்டிடம் எழுப்புவதும், அதன்மீது அமர்வதும், எழுதுவதும் வெறுப்பிற்குரியதாகும். (ஷாஃபி மத்ஹப் நூல்: அல்முஹத்தப் பாகம்: 1 பக்கம்: 138)

கப்ருகள் தரைக்கு மேல் ஒரு ஜான் அல்லது அது போன்ற அளவிற்கு உயர்த்தப்படுவதைத் தான் நான் விரும்புகிறேன். அது கட்டப்படாமல் இருப்பதையும் பூசப்படாமல் இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது (கட்டுவதும் பூசுவதும்) அலங்காரத்திற்கும் பெருமைக்கும் ஒப்பாக உள்ளது. மரணம் இதற்கு உரியதல்ல. முஹாஜிரீன்கள் மற்றும் அன்சாரி ஸஹாபாக்களின் கப்ருகள் பூசப்பட்டதாக நான் காணவில்லை.

மக்கமா நகரில் அதிகாரிகள் அங்கு கட்டப்பட்ட கப்ருகளை இடித்ததைப் பார்த்தேன். இதை மார்க்க அறிஞர்கள் யாரும் குறை கூறவில்லை. இவ்வாறு ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள். (இமாம் ஷாஃபி அவர்கள் தொகுத்த நூல்: அல் உம்மு, பாகம்: 1 பக்கம்: 277)

கப்ரிருந்து வெளியேற்றப்பட்ட மண்ணை விட அதிகமான மண் (வைத்து கப்ரை மூடுவது) வெறுப்பிற்குரியதாகும். ஏனென்றால் கப்ரின் மீது மண்ணை அதிகரிப்பது அதனைக் கட்டுவதைப் போன்றதாகும். (ஹனபி மத்ஹப் நூல்: அல் பஹ்ருர் ராயிக், பாகம்: 2 பக்கம்: 209)

கப்ரை முத்தமிடுவது நரகத்தில் சேர்க்கின்ற பித்அத்தாகும்!

கப்ரை முத்தமிடுவதும் கட்டியணைப்பதும் வெறுப்பிற்குரியதாகும். இறை நேசர்களின் ஜியாரத்திற்காகச் செல்லும் போது நிலைப்படிகளை முத்தமிடுவதும் வெறுப்பிற்குரியதாகும். இவை மக்கள் செய்து வருகின்ற பித்அத்தான காரியங்களாகும். (ஷாஃபி மத்ஹப் நூல்: முக்னில் முஹ்தாஜ், பாகம்: 1 பக்கம்: 364 )

நபிமார்கள் மற்றும் அவ்யாக்களின் பொருட்டால் வஸீலா தேடுவது கூடாது!

ஒருவன் “இன்னாரின் பொருட்டால் அல்லது உன்னுடைய நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களின் பொருட்டால்” என்று தன்னுடைய துஆவில் கூறுவது வெறுப்பிற்குரியதாகும். ஏனென்றால் படைத்தவனிடத்தில் படைக்கப்பட்ட பொருளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. (ஹனஃபி மத்ஹப் நூல்: ஹிதாயா, பாகம்: 4 பக்கம்: 459)

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்பக்கூடியவன் காஃபிராவான்!

நபி (ஸல்) அவர்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் காஃபிராகி விடுவான். (ஹனஃபி மத்ஹப் நூல்: அல் பஹ்ருர் ராயிக், பாகம்: 3 பக்கம்: 94)

இறந்தவர்கள் எதையும் கேட்க மாட்டார்கள்!

மரணித்தவர் பேசுவதை செவியேற்பதைப் பற்றிய ஆய்வு: பேசுவதின் நோக்கமே (மற்றவர்) விளங்கிக் கொள்வதற்காகத் தான். மரணம் என்பது இதற்கு அப்பாற்பட்டதாகும். (நூல்: ரத்துல் முஹ்தார், பாகம்: 3 பக்கம்: 836.)

(பத்ருப்போரில் கிணற்றில் வீசப்பட்டவர் செவியேற்றார்கள் என்பதை) ஆயிஷா (ர) அவர்கள் “உம்மால் கப்ருகளில் உள்ளவர்களை செவியேற்கச் செய்ய முடியாது” (35:22) மற்றும் “உம்மால் இறந்தவர்களைச் செவியேற்கும்படி செய்ய முடியாது” (27:80) ஆகிய வசனங்களைக் காட்டி மறுத்துள்ளார்கள். (நூல்: ரத்துல் முஹ்தார் பாகம்: 3 பக்கம்: 836)

இறந்தவர் பெயரில் ஃபாத்திஹா ஓதி பார்சல் செய்ய முடியாது!

“ஒருவர் மற்றவரின் சுமையைச் சுமக்கமாட்டார்; மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை” (53:39) இந்த வசனத்திருந்து ஷாஃபி (ரஹ்) அவர்களும் அவரைப் பின்பற்றியவர்களும் பின்வருமாறு சட்டம் எடுக்கிறார்கள்: “குர்ஆன் ஓதி அதன் நன்மையை இறந்தவர் களுக்குச் சேர்த்து வைப்பது அவர்களை அடையாது.

ஏனென்றால் இது (இறந்தவர்களாகிய) அவர்கள் செய்த செயல் அல்ல. இன்னும் அவர்களுடைய சம்பாத்தியமும் அல்ல. இதன் காரணமாகத் தான் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய சமுதாயத்தை முன்னோக்கி (அதைச்) செய்யுமாறு தூண்டவும் இல்லை. நேரடியாகவோ அல்லது (மறைமுகமான) சுட்டிக் காட்டுதன் மூலமோ நபி (ஸல்) அவர்கள் இதற்கு வழிகாட்டவில்லை. நபித்தோழர்களில் எந்த ஒருவரும் கூட இவ்வாறு செய்ததாக (எந்த செய்தியும்) பதிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு செய்வது நன்மையானதாக இருந்தால் இதில் அவர்கள் நம்மை முந்தியிருப்பார்கள். (நூல்: தப்ஸீர் இப்னு கஸீர் 53:39 வசனத்தின் விரிவுரை)

ஜும்ஆவிற்கு ஒரு பாங்கு தான்

ஸாயிப் பின் யஸீத் (ர) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலும், அபூபக்ர் (ர), மற்றும் உமர் (ர) அவர்களுடைய காலத்திலும் இமாம் மிம்பரில் அமரும்போது சொல்லப்படுகின்ற முதல் பாங்கு தான் ஜும்ஆவிற்குரிய பாங்காக இருந்தது. உஸ்மானுடைய ஆட்சிக் காலம் ஏற்பட்ட போது, மக்கள் அதிகமானார்கள். எனவே உஸ்மான் இரண்டாவது அறிவிப்பை செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.

எனவே அது அறிவிக்கப்பட்டது. இவ்வாறே அக்காரியம் நிலைபெற்றுவிட்டது.

ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதாவு என்ற அறிஞர் உஸ்மான் (ர) அவர்கள் தான் இதனைப் புதிதாக உருவாக்கினார் என்பதை மறுத்து, முஆவியா (ர) அவர்கள் தான் இதனைப் புதிதாக உருவாக்கினார் என்று கூறியுள்ளார். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

மேலும் ஷாஃபி (ரஹ்) கூறுகிறார்கள்: எது எப்படி இருந்தாலும் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் இருந்த (ஒரு பாங்கு கூறும்) முறை தான் எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியதாகும். (ஷாஃபி இமாம் அவர்களின் அல்உம்மு’ என்ற நூல், பாகம்: 1 பக்கம்: 195).

Source : https://dhargavalikedu.blogspot.com/2010/10/blog-post_04.html