ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சியில் சேர செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

02/09/2010 09:56

ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெ. ஷோபனா, செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை அண்ணா நகரில் உள்ள இந்திய குடிமைப் பணி தேர்ச்சி மையத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட ஆட்சிப் பணிகளுக்காக நடத்தப்படும், 2011-ம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் உள சார்புத் தேர்வுக்கு முழு நேரம் மற்றும் பகுதி நேர பயிற்சி நடைபெற உள்ளது.

இதற்கு ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர வகுப்பைச் சேர்ந்த பட்டப் படிப்பு முடித்து, குறைந்தபட்சம் 21-வயது நிரம்பிய மாணவ,மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பயிற்சிக்கு மாணவர்களை சேர்க்கும்பொருட்டு, அக்டோபர் 31-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள தகுதியுள்ள மாணவர்கள் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தின் முதல்வருக்கு வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Dinamani