கம்பெனி செகரட்டரிஷிப் படித்தால் வேலை கொட்டிக் கிடக்குது

12/10/2010 14:08

கம்பெனி செகரட்டரிஷிப் படித்தால் வேலை கொட்டிக் கிடக்குது - இந்த உண்மை தெரியுமா?
 

என்ஜினீயரிங் படிப்பில் ஐ.டி., கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் -கம்யூனிகேஷன் படித்த பிறகும் வேலையில்லாதவர்கள் உண்டு. ஆனால், கம்பெனி செகரட்டரிஷிப் படித்து வேலையில்லாதவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, இன்னும் எத்தனை பேர் வந்தாலும் வேலைவாய்ப்பு திறந்தே கிடக்கிறது என்பது வியப்பான உண்மை.

 

அப்படியென்ன வேலைவாய்ப்பு இருக்கிறது?

ரூ. 2 கோடிக்கு மேல் செலுத்திய முதலீடு (Paidup Capital)  செய்துள்ள நிறுவனங்கள் தகுதி பெற்ற கம்பெனி செகரட்டரியை நியமிக்க வேண்டும் என்பது சட்டப்படி முக்கியம்.

 ரூ.2 கோடிக்குக் கீழே முதலீடு செய்தவர்கள் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றவர்களை உதவி கம்பெனி செகரட்டரியாக அமர்த்தலாம்.பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ள அனைத்து நிறுவனங்களும் கம்பெனி செகரட்டரியை நியமிக்கவேண்டும்.

 

இந்தப் படிப்பை முடித்தவர்களை மத்திய அரசின் உயர் பதவியில் அமர்த்தலாம் என கல்வி அமைச்சகம் அங்கீகாரம் அளித்துள்ளது. இப் படிப்பு முடித்தவர்கள் நிர்வாக இயக்குநர்களாக முழு நேர இயக்குநர்களாக, கம்பெனி தலைவர்களாக, துணைத் தலைவர்களாக பணியமர்த்தலாம். இவ்வாறு கம்பெனியில் சேர்ந்து பணியாற்றாமல், வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர் போல் தனியாகவும் தொழில்முறை பணியை மேற்கொள்ளலாம்.

 

 

இவை மட்டுமின்றி ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கம்பெனி செயலர் ஆலோசகர்களாகப் பணியாற்றவும் செய்யலாம். இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் கிளைகளைத் தொடங்குகின்றன. அதுபோல், உலக நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளைத் தொடங்குகின்றன.

 

 

எனவே, வேலைவாய்ப்பும் விரிவடைந்து வருகிறது.

 

மேலும், பல்வேறு நாடுகளுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டங்கள், செயல்பாடுகள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும். மேலும், பிரிட்டனின் "ஐ.சி.எஸ்.ஏ. -யு.கே.' என்ற நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

 

கம்பெனி செகரட்டரி படிப்புக்கான தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். ஜூன், டிசம்பர் ஆகிய மாதங்களில் இத்தேர்வுகள் நடைபெறும். மார்ச் 31-ம் தேதி பதிவு செய்தால், டிசம்பரில் தேர்வு எழுதலாம். செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பதிவு செய்தால் அடுத்து வரும் ஜூனில் தேர்வு எழுதலாம்.

இப்படிப்பில் சேர என்ன வழி? 

 

12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். யார் வேண்டுமானாலும் "கம்பெனி செகரட்டரிஷிப்' படிப்பில் சேரலாம். இது போல் பட்டம் படித்தவர்களுக்கும், முதுநிலை படித்தவர்களுக்கும் படிப்புகள் உண்டு. வயது வரம்பு இல்லை.

 

 

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு 50 சதவீத கட்டணச் சலுகை உண்டு. சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பரிசுகள், பதக்கங்கள், உதவித் தொகைகள் உண்டு.

 

 

நிர்வாகவியல், தொழில்முறை பயிற்சி பெறுவோருக்கு இந்நிறுவனம் வேலைவாய்ப்பு வசதி செய்து தரும். அடிப்படைத் தேர்வு எழுதியவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் மேலாண்மையியல் படிப்பில் சேரலாம். பிறகு இறுதித் தேர்வு எழுதலாம்.

 

 

இறுதித் தேர்வு முடித்த பின் 16 மாத மேலாண்மைப் பயிற்சி (Management Training) பெறவேண்டும். அதன் பிறகு இன்ஸ்டிடியூட்டில் பதிவு செய்தால், ஏ.சி.எஸ்.  (Associate Company Secretary)  முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

 

கம்பெனிகள் ஆரம்பித்தல், கம்பெனிகள் பல்வேறு துறைகளில் அளிக்க வேண்டிய ஆவணங்களைச் சமர்ப்பித்தல், கம்பெனி நீதிமன்றங்களில் ஆஜர் ஆகுதல் ஆகிய பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறார்.

 

 

இது தவிர, பல்வேறு சட்டங்களின் கீழ் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights) கீழும் தொழில் புரியலாம். ""தற்போது நாடு முழுவதும் 21 ஆயிரம் பேர்தான் கம்பெனி செயலர்களாக இருக்கின்றனர். இன்னும் ஏழு ஆண்டுகளில் இதை 50 ஆயிரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது'' என்கிறார் இந்திய கம்பெனி செயலர் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த (The Institute of Company Secretaries of India) கெய்யூர் பக்ஷி.

 

 

தகவல் தொழில்நுட்பம், சட்டம் ஆகிய படிப்புகளைப் போல் கம்பெனி செயலர் படிப்பு குறித்து கிராமப்புற மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.முதல் கட்டமாக கம்பெனி செயலர் கல்வித் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

 

 

உலகமயமாதல் சூழ்நிலையில், இந்திய நிறுவனங்களிலும், வெளிநாட்டு நிறுவனங்களிலும் கம்பெனி செயலர் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உருவாகி வருகிறது. கம்பெனிகள் பதிவாளர் அலுவலகம், செபி, ரிசர்வ் வங்கி ஆகிய அமைப்புகளின் வரைமுறைகளை கம்பெனிகள் சரியாகப் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்காணித்து நடைமுறைப்படுத்தும் முக்கியமான பணியையும் மேற்கொள்கின்றனர்.

கம்பெனிகள் சட்டம், பங்குகள் பரிமாற்றம் குறித்த சட்டங்களில் கம்பெனி செகரட்டரி வல்லுநராக இருப்பார். நிறுவனத்தின் சட்டம், நிதி, கணக்கு, பணியாளர் நிர்வாகம், பொது நிர்வாகம் ஆகிய பல்வேறு துறைகளில் தொடர்புகொண்டு நிறுவனத்தை நடத்துகிறார்.

 

அத்துடன் இயக்குநர்கள் குழு, பங்குதாரர்கள், அரசு, பொதுமக்கள், கம்பெனி ஊழியர்கள் ஆகியோர்களிடையே பாலமாகச் செயல்படுகிறார். கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை இந்திய கம்பெனி செகரட்டரி நிறுவனம் நடத்துகிறது. இது நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு மத்திய கம்பெனி விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

 

 

அடிப்படைத் தேர்வு ((Foundation Course)  4 தாள்கள் (கட்டணம் ரூ.3,600); மேலாண்மை நிலை (Executive Programme)  6 தாள்கள், (கட்டணம் ரூ. 7,750); தொழில்முறைப் படிப்பு (Professional Programme)  8 தாள்கள் (கட்டணம் ரூ.7,500).

 

கம்பெனி செகரட்டரி படிப்பின் அடிப்படைத் தேர்வு இணையவழிக் கல்வியாக (E-learning)  நடப்பு ஆண்டில் நடத்தப்படும். கலந்துரையாடல், வினாடி-வினா ஆகிய பல்வேறு நூதன வழிகளில் கல்வி கற்பிக்கப்படும். பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. அடிப்படைத் தேர்வில் 4 தாள்கள், நிர்வாகத் தேர்வில் 6 தாள்கள், தொழில்முறைத் தேர்வில் 8 தாள்கள் இருக்கும்.

 

 

இத்தொழிலில் சேருவோர் தொடக்கத்திலேயே மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் வரை ஊதியம் பெறலாம். கம்பெனி செயலர் பயிற்சி நிறுவனத்தின் கிளைகள் நாட்டின் 71 நகரங்களில் உள்ளன. சென்னை, மும்பை, கோல்கத்தா, தில்லி என நான்கு மண்டலங்கள் இயங்கி வருகின்றன. இது மேலும் விரிவடைய இருக்கிறது.

 

 

இப்படிப்பில் ஆண்டுமுழுவதும் எப்போதும் சேரலாம். தபால் வழி கல்விக் கட்டாயம். மண்டல அலுவலகம், கிளை அலுவலகங்களில் நடக்கும் வாய்மொழி வழிப் பயிற்சியிலும் சேரலாம். இந்திய கம்பெனி செயலர் பயிற்சி நிறுவனத்தின் பெயரை "இந்திய பட்டயச் செயலர் பயிற்சி நிறுவனம்'(The Institute of Charted Secretaries of India) எனப் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

 

தென்னிந்திய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள், முந்தைய ஆண்டுக்கான கேள்வி -பதில் புத்தகம், இன்ஸ்டிடியூட் வெளியிடும் புத்ககம் கிடைக்கிறது. மாணவர்களை நேரடியாகச் சேர்க்கும் முறையும் உண்டு. மாணவர் சேர்க்கையில் உடனடி சேர்க்கையும் உண்டு.

 

 

Deputy Director,

 

The Insititted of Company secretaries of India,

 

No:9, ‘ICSI-SIRC House,’ 9, Wheat Crofts Road,

 

Nungakbakkam chennai. 34.

 

Teld: 044- 2827 9898, 2826 8685. fax 044 2826 8685.

 

 

www.icsi.edu; Email: icsisirc@md3.vsnl.net.in
 
தகவல் சகோதரர் சர்புதீன் முஸ்லிம் மெயில்ஸ் குழுமம் வாயிலாக...