குஜராத் கலவரம்: நரேந்திர மோடி மீதான குற்றச்சாற்றுக்கு ஆதாரமில்லை-உச்ச நீதிமன்றத்தில் புலனாய்வுக் குழு அறிக்கை
குஜராத் கலவரங்களை அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி தடுக்க தவறிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாற்றுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்று சிறப்பு புலனாய்வுக் குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கலவரத்தின்போது உயிரிழந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈசான் ஜக்லின் மனைவி யாசியா ஜக்லின் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுபடி சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா இரயில் எரிப்பு நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் குஜராத் முழுவதும் பரவியதற்கு அம்மாநில முதலமைச்சர், அதிகாரிகளே காரணம் என்று யாசியாவின் குற்றச்சாற்று தொடர்பாக கடந்த மே மாதம் நரேந்திர மோடி சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான விவரங்கள் சிறப்பு புலனாய்வுக்குழு அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில், குஜராத் கலவரத்தை நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள் தடுக்க தவறிவிட்டதாக கூறப்படுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கலவரத்திற்கு நரேந்திர மோடிதான் காரணம் என்று அடிப்படை முகாந்திரம் இல்லாமல் புகார் கூறப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்திடம் சிறப்பு புலனாய்வுக்குழு எடுத்துரைத்துள்ளது.
இதனால் குஜராத் கலவரம் தொடர்பான வழக்கால் நரேந்திர மோடிக்கு ஏற்பட்டிருந்த நெருக்கடி குறைந்துள்ளது. webdunia.com