சந்திரன் பூமியை நெருங்கும் போது பூகம்ப வாய்ப்புகள் அதிகரிக்கிறது: விஞ்ஞானிகள்

31/10/2010 13:26
புஹாரி1040. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
.

கிரகணம் ஏற்படும்போது உள்ள ஆபத்தை கருத்தில் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிரகணம் முடியும் வரை தொழவும், பிரார்த்தனை செய்யவும் கட்டளை இட்டுள்ளார்கள். அதை உண்மைப்படுத்தும் அறிவியல் செய்தி கீழே தரப்பட்டுள்ளது.

******************************************************

 

சந்திரன் பூமிக்கு அருகில் (பெரிஜி) வரும்போது, வளர் பிறையில் நிலநடுக்க வாய்ப்புகள் அதிகரிப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் நிலநடுக்க ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மு்ழு நிலவின்போது (பௌர்ணமி) நிலநடுக்க வாய்ப்புகள் மேலும் அதிகரிப்பதாக அவர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

சந்திரன் பூமிக்கு அருகில் வருவது பௌர்ணமியும் ஏற்படும் தருணத்தில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதையும் இவர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

சந்திரன் பூமியை விட்டு தொலைவில் இருக்கும் (அப்போஜி) போது நிலநடுக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளது. மாறாக அருகில் வரும்போது ரிக்டர் அளவுகோலில் குறைந்தது 6 என்று பதிவாகும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இதனை பாபா அணு ஆராய்ச்சி நிலநடுக்க ஆய்வு விஞ்ஞானி டாக்டர் விநாயக் ஜி. கோல்வன்கர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுக் கட்டுரை இந்தியன் ஜியோபிசிக்ஸ் யூனியன் இதழில் வெளியாகியுள்ளது.

இதுவரை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நேரத்தினை அவர்கள் ஆய்வு செய்தபோது இரவிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர்.

பகலில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவும், மாலை 3 மணி முதல் 4 மணிக்குள்ளாக ஏற்படும் நிலநடுக்கங்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவே.

36 ஆண்டுகளாக இருந்து வரும், அதாவது 1973ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையிலான நிலநடுக்கப் பொதுத்திட்ட அளவையை இந்த விஞ்ஞானிகள் மாற்றி அமைத்து சந்திரனின் நிலைக்கும், நிலநடுக்கம் ஏற்படுவதற்குமான வாய்ப்புகளை பல்வேறு காலக் கட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களை வைத்து ஆராய்ந்து இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பாங்கு உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர்.

 

சந்திரன் பூமிக்கு அருகில் இருப்பதால் அது பூமியின் புவியீர்ப்பு விசையில் பெருமளவு தாக்கம் செலுத்துகிறது.

ஆனால் இதுவரை ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்கள் அனைத்திற்கும் சந்திரனின் நிலைதான் காரணம் என்பதை நிறுவ முடியவில்லை.

ஆனால் அமாவாசையில் இருந்து பௌர்ணமியாக வளரும் நாட்களில் நிலநடுக்க வாய்ப்புகளை ஆராய்ந்த போது சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது என்று விஞ்ஞானி வினாயக் தெரிவித்துள்ளார்.

பௌர்ணமியின்போது பூமிக்கு அடியில் 10 கிமீ முதல் 35 கிமீ வரை நிலநடுக்க மையம் உருவாகும் சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி வேங்கடநாதன், 2004ஆம் ஆண்டு சுமத்ரா தீவிற்கு அருகே ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தை முன்கணித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் சில ஒரே நேர்க்கோட்டில் வரும் காலத்தில்தான் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்பதை 100 ஆண்டுகளில் நடந்த பல்வேறு நிலநடுக்கங்களை ஆராய்ந்து தெரிவித்ததோடு மட்டுமின்றி, அவ்வாறே பூகம்பங்கள் ஏற்படுகின்றன என்பதை முன்னறிவித்து நிரூபித்தவர் வேங்கடநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமத்ரா நிலநடுக்கம் எங்கே, எப்போது ஏற்படும் என்பதை மிகத் துல்லியமாக அறிவித்த வேங்கடநாதன், அதன்பிறகு பல நிலநடுக்கங்களை தனது நிலவியல் - வானியல் கோட்பாட்டின் படி (Astro Physical Principle) முன்னறிவிப்புச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Webdunia.com