சர்வதேச காவல்துறையால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் பட்டியலில் 650 இந்தியர்கள்
சர்வதேச காவல்துறையால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் பட்டியலில் 650 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இதுதொடர்பாக இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சா வழியினருக்கு 656 பிடியாணை தாக்கீது உலக குற்றவியல் கண்காணிப்பு அமைப்பான இண்டர்போல் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் பிறநாடுகளில் குற்றம்புரிந்தவர்கள். இவர்கள் எங்கு வசித்தாலும், சொந்த நாட்டுக்கு தகவல் தெரிவித்துவிட்டு இவர்களை கைது செய்யுமாறு இண்டர்போல் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சர்வதேச காவல்துறையிடம் இருந்து பிடியாணை தாக்கீது பெற்ற இந்தியர் மற்றும் இந்திய வம்சா வழியினர்கள் குறித்த விவரத்தை அஸ்வினி ஸ்ரீவத்சவ் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அதற்கு சர்வதேச காவல் துறை சார்ந்த இந்திய அமைப்பு அளித்த தகவலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய காவல் அமைப்பான சர்வேதச காவல்துறை அமைப்பில் 188 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச காவல்துறையினரால் தேடப்படுபவர்களில் பெரும்பாலானோர் பயங்கரவாதம், பாலியல் புகார் போன்ற குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள்.
கடந்த 2005 முதல் 2010 மே வரையில் 656 பிடியாணை தாக்கீதுகள் இந்தியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 2007இல் 133 பேருக்கும், 2006இல் 119 பேருக்கும், 2008இல் 85 பேருக்கும், 2005இல் 95 பேருக்கும், 2010ஆம் ஆண்டு மே வரையில் 75 பேருக்கும் இந்த தாக்கீதுகள் அனுப்பப்பட்டுள்ளன.
சௌதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், அமெரிக்கா, ஹாங் காங், ரஷ்யா, பெலாரஸ், எகிப்து, ஆஸ்ட்ரேலியா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தான் அதிக குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நிதி மோசடி, பாலியல் புகார், ரயில்வே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, இ-மெயில் மோசடி, வரதட்சணை கொடுமை போன்ற குற்றங்கள்தான் அதிகம்.
ஹாஜி இப்ராகிம்-பயங்கரவாதத்தோடு தொடர்புடைய வழக்கு, சயீக் அன்வர்-நாடுகளுக்கு இடையே போரை ஏற்படுத்த முயன்றது, ஷாஜகான்-குண்டுவைத்தது, இக்பால்-சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக பிடியாணை தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
webdunia