நீரா ராடியா வீடு உள்பட 34 இடங்களில் சி.பி.ஐ சோதனை
2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக நீரா ராடியா, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவரின் வீடு, அலுவலகங்கள் உள்பட 34 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக வைஷ்ணவி கம்யூனிகேசன் நிறுவனத் தலைவர் நீரா ராடியாவுக்கும் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் விவரம் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுடன் உச்ச நீதிமன்றம் வரை சென்றது இந்த விவகாரம்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள நீரா ராடியாவின் வீடுகளிலும், பாரகம்பாவில் உள்ள அவரது அலுவலகத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் பிரதீப் பைஜல் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி டெல்லியில் 7 இடங்கள் உள்பட 34 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளதால் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா வீடு, அலுவலகம், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் அண்மையில் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Webdunia.com