பின்லேடனுடன் 2 மகன்கள், 2 மனைவிகளும் பலி?-நேரடியாக சண்டை போட்ட லேடன்

02/05/2011 11:34

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பின்லேடனுடன் சேர்த்து அவரது இரண்டு மகன்கள், 2 மனைவிகளும் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.



அமெரிக்கப் படைகளுடன் நேரடியாக பின்லேடனே சண்டை போட்டதாக அமெரிக்க உளவுத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் மகன்கள் கொல்லப்பட் தகவல் மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேசமயம், மனைவியர் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படவில்லை.

அப்போத்தாபாத் என்ற இடத்தில் தங்கியிருந்த பின்லேடனை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வளைத்த அமெரிக்க விசேஷப் படையினர் சரமாரியாக சுட்டு வீழ்த்தினர்.

இந்த சம்பவத்தில் பின்லேடன் கொல்லப்பட்டதை மட்டும் இதுவரை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும் லேடனின் இரு மகன்கள், 2 மனைவிகளும் கொல்லப்பட்டதாக பாகி்ஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேரடியாக சண்டை போட்ட லேடன்:

இந்த மோதல் குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அது தன்னை சரமாரியாக தாக்கிய அமெரிக்கப் படையினருடன் துப்பாக்கி ஏந்தி லேடனே நேரடியாக சண்டை போட்டார் என்பதுதான்.

லேடன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் நடமாடவே முடியாத நிலை. சர்க்கரை வியாதி அதிகரித்து விட்டது என்றெல்லாம் சில காலத்திற்கு முன்பு வரை செய்திகள் வந்து கொண்டிருந்தன என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் அமெரிக்கப் படையினர் லேடன் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டுத் தாக்கியபோது படு துணிச்சலாக துப்பாக்கி ஏந்தி நேரடியாக சண்டை போட்டுள்ளார் லேடன். அப்போதுதான் அவர் துப்பாக்கியால் சல்லடை போல துளைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.

பக்ராம் விமான தளத்தில் லேடன் உடல்:

கொல்லப்பட்ட பின்லேடன் உள்ளிட்டோரின் உடல்கள் பக்ராம் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு பத்திரிக்கையாளர்களை அனுமதிப்பது குறித்து அமெரிக்கா யோசித்து வருகிறது. விரைவில் பத்திரிக்கையாளர்களை அனுப்பி பின்லேடன் உடலைப் பார்வையிட அமெரிக்க ராணுவம் அனுமதிக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, கொல்லப்பட்ட பின்லேடனின் முகம் மட்டும் புகைப்படமாக அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டுள்ளது. அதில் முகம் சல்லடையாக துளைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

 

thatstamil