முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்தவர் மீதான வழக்கு விசாரணை!

27/04/2011 11:04

முகமது நபியைக் கேலிச்சித்திரம் வரைந்த டானிஷ் நாட்டைச் சேர்ந்த ஓவியர் குர்ட் வெஸ்டர்கார்ட் மீதான வழக்கின் விசாரணையை ஜோர்டான் நீதிமன்றம் தொடங்கியது.

முகமது நபியை இழிவுபடுத்தியதாக வெஸ்டர்கார்ட் மற்றும் அவர் வரைந்த சித்திரத்தை வெளியிட்ட டானிஷ் நாளிதழ் உள்ளிட்டோர் மீதான வழக்கின் விசாரணை அவர்கள் ஆஜராகாத நிலையிலேயே ஜோர்டான் தலைநகர் அம்மானில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் திங்கள் கிழமையன்று தொடங்கப்பட்டுவிட்டதாக இந்த வழக்கைத் தொடர்ந்துள்ள வழக்கறிஞர்களில் ஒருவரான தாரிக் ஹவாமதா கூறியுள்ளார்.

இந்த வழக்கில் சாட்சிகளை விசாரணை செய்வதற்காக வழக்கை மே 8ஆம் தேதிக்கு நீதிபதி நாதிர் ஷஹாதா ஒத்தி வைத்துள்ளார் என்றும் ஹவாமதா கூறியுள்ளார்.

வெஸ்டர்கார்டு வரைந்த கேலிச்சித்திரங்கள் 2005ஆம் ஆண்டில் டானிஷ் நாளிதழ் ஒன்று வெளியிட்டது. பின்னர் மேலும் 17 டானிஷ் நாளிதழ்களில் இந்தக் கேலித்திரங்கள் வெளியானதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கேலிச்சித்திரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2008ஆம் ஆண்டு ஜோர்டானைச் சேர்ந்த 30 நாளிதழ்கள், இணைய தளங்கள் மற்றும் வானொலி நிலையங்கள் இணைந்து வெஸ்டர்கார்டுக்கு எதிராக ஜோர்டானில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு வெஸ்டர்கார்டுக்கு ஜோர்டான் நீதிமன்றம் ஏப்ரல் 14ஆம் தேதியன்று சம்மன் அனுப்பியது.

75 வயதாகும் வெஸ்டர்கார்டு இந்த வழக்கு குறித்த தமக்கு எவ்வித சம்மனும் வரவில்லை என்றும் சம்மன் வந்தாலும் தான் ஆஜராகும் நிலையில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

inneram.com

 

இவன் வரைந்த மேலும் பல புகைப்படங்களைக்காண...