முஸ்லிம் என்பதால் இழிவுபடுத்தப்பட்டேன் : ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி

20/07/2012 10:25

தாம் முஸ்லிம் என்பதால் ஸ்பைஸ்ஜெட் விமான ஊழியர் ஒருவர் தன்னை இழிவு படுத்தியதாக ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இவரது குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
மேஜர் முகமது அலி ஷா என்பவர் இந்திய இராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தேசிய சிறுபான்மை ஆணையத்திடம் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் மீது புகார் இதுதொடர்பாக அளித்துள்ளார்.

தேசிய சிறுபான்மை ஆணையத் தலைவர் வஜ்ஹத் ஹபீபுல்லாவுக்கு இவர் அனுப்பியுள்ள மனுவில், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் கலாநிதி மாறனுக்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் மூலம் புகார் செய்தும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி டில்லியிலிருந்து கவுஹாத்தி செல்லும் விமானத்தில் இவர் பயணம் செய்தார். விமானத்தில் ஏறிய பின், விமான அதிகாரிகள் என்னுடைய பொருள்களை அடையாளம் காட்டுமாறி கூறினர். இது வழக்கமாக நடைபெறாத ஒன்று. பின்னர் நான் விமானத்தை விட்டு வெளியே வந்து என்னுடைய பொருள்களைப் பார்த்தபோது, அவை சேதப்படுத்தப்பட்டிருந்தன என்று அலி கூறியுள்ளார்.

பின்னர் அந்த விமானத்தில் தான் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் அலி கூறியுள்ளார்.

மேஜர் முமது அலி ஷா, அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் லெஃப்டினன்ட் ஜெனரல் இசட் யூ ஷாவின் மகனும் பிரபல பாலிவுட் நடிகர் நசீருத்தீன் ஷாவின் மருமகனும் ஆவார்.

 www.inneram.com