ராமநாதபுரத்தில் நாளை சர்வதேச மின்னியல், கணினி தொழில்நுட்ப மாநாடு
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியும், கன்னியாகுமரி செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரியும் இணைந்து, தமிழகத்தில் தென்மாவட்ட அளவில் முதல் முறையாக சர்வதேச அளவிலான மின்னியல், தொலைத்தொடர்பியல், கணினித் தொழில்நுட்பம் குறித்த மாநாட்டை நடத்துகின்றன.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இம் மாநாட்டில், 4 நாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 175 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இது குறித்து செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி செயலாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா கூறியதாவது:
இந்த மாநாட்டை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவு
பேராசிரியர் செல்வக்குமார் மாணிக்கம் துவக்கி வைக்கிறார்.
ஓமன் அல் மவுசானா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆயம் ஏ.யகாயா, மலேசிய அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆன்ட்ரூ மெலன்பெர்க் ஆகியோரும், பேராசிரியர்கள் ராமலதா மாரிமுத்து, சிவானந்தம், சுகநேஷ், இளங்கோ உள்பட முன்னணி பொறியியல் கல்லூரிப் பேராசிரியர்களும் பங்கேற்கின்றனர்.
இதில் பட்ட மேல்படிப்பு மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்றார் அவர்.
தினமணி