ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் இல்லத்தில் வைகையாற்று வெள்ளம்
கலெக்டர் வீட்டில் வெள்ளம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் இல்லத்தில் வெள்ளம் காரணமாக 4 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
ராமநாதபுரம் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை காரணமாக ஏறத்தாழ 1,500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அந்த வீடுகளில் வசித்தவர்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
சிவன் கோவில் அருகே பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அங்கு யாரும் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட வில்லை. ஆணைகுடி கண்மாயில் 20 மீட்டர் நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
ராமநாதபுரம் பெரிய கண்மாய்
வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வந்து கொண்டு இருக்கிறது. எனவே கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வைகை வெள்ளம் காரணமாக பரம குடியில் உள்ள தரைப்பாலமும், தற்காலிக பாலமும் தண்ணீரில் மூழ்கி உள்ளன. அந்த குதியில் உள்ள 40 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளன. அந்த கிராம மக்கள் பரம குடிக்குள் வர முடியாமல் தவிக்கிறார்கள்.
dailythanthi.com