ரியாத்தில் தீ விபத்து 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் பலி

03/07/2011 09:44

சௌதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 இந்தியர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

 

 தலைநகர் ரியாத்தின் அல் பாத்தா பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தின் இரண்டாவது மாடியில் நிகழ்ந்த தீ விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்ததாக மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அகமது தெரிவித்தார்.

 

 இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி, ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கான செலவுகளை இந்திய அரசே ஏற்கும் என்று கூறிய அவர், இறந்தவர்கள் குறித்து கவலை தெரிவித்தார்.

 

 இந்தத் தீ விபத்து குறித்து சௌதி அரேபிய அரசு முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

 தீ விபத்து நடந்த அந்த கட்டடத்தில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் தங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

தினமணி