வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது

31/08/2010 09:21

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.

"இதன்மூலம், வெளிநாடுகளில் குடியுரிமை பெறாத இந்தியர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும். ஆனால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. இரட்டை குடியுரிமை பெற்றிருப்பவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படாது என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து வெளிநாடுவாழ் இந்தியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த மசோதா விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தேர்தல் சீர்திருத்தம் குறித்து அக்டோபர் அல்லது நவம்பரில் நடைபெற உள்ள தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், நிபுணர்களின் ஆய்வறிக்கைக்குப் பின்னர் இது தொடர்பாக புதிய மசோதா கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

Dinamani