150 கி.மீ பயணிக்கும் சோலார் ரிக்ஷாவை உருவாக்கி தமிழக வாலிபர் அசத்தல்

10/09/2012 18:03

 

சூரிய சக்தி மூலம் இயங்கும் சோலார் ரிக்ஷா ஒன்றினை தமிழ்நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உருவாக்கி அசத்தியுள்ளார்.

திருப்பூரை சேர்ந்த சிவராஜ் முத்துராமன் எம்.பி.ஏ (26) என்ற மாணவர் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத புதிய ஆட்டோ ரிக்ஷாவை வடிவமைத்துள்ளார்.

"ஈக்கோ ப்ரீ கேப்"(Eco free cab) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரிக்ஷாவில் 3 பேர் வரை பயணம் செய்யலாம்.

மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால் 45 மைல் வேகத்தில் 150 கி.மீ வரை இந்த சோலார் ரிக்ஷாவில் பயணம் செய்யலாம்.

சூரிய மின்சக்தி தீர்ந்துவிட்டால் கூட சைக்கிளை ஓட்டுவது போன்று பெடலிங் செய்து ஓட்ட முடியும் என்பது இந்த ரிக்ஷாவின் கூடுதல் சிறப்பு ஆகும்.

இது குறித்து சிவராஜ் கூறுகையில், இந்த சோலார் ரிக்ஷாவை தயாரிக்க 3 ஆண்டுகள் ஆனது. முதலில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தன.

பின்னர் அவற்றையெல்லாம் சரி செய்து தற்போது இதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கிவிட்டேன் என்றும் வணிக ரீதியில் அறிமுகம் செய்ய வேண்டுமானால் 80,000 ரூபாயில் விற்பனைக்கு கொண்டு வரலாம் எனவும் தெரிவித்தார்.

இந்த ரிக்ஷாவுக்கு பராமரிப்பு செலவு முற்றிலுமாக இருக்காது என்று கூறும் சிவராஜ், தனது இந்த கண்டுபிடிப்புக்கு இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

இந்த புதிய சோலார் ரிக்ஷாவை சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெரிய நகரங்களில் இயக்குவதற்காக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேசி வருகிறேன் என்று தெரிவித்தார்.

கார்பன் புகையால் திணறி வரும் இந்நகரங்களுக்கு இந்த புதிய சோலார் ரிக்ஷா நிச்சயம் வரப்பிரசமாக இருக்கும் என கூறப்படுகின்றது.