சவூதியில் பயங்கர விபத்து - 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் பலி

17/09/2012 21:23

 

ஜூபைல்: சவூதி அரேபியாவின் ஜூபைல் என்ற நகரில் இன்று நடந்த மோசமான சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூபைல் நகரில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இந்தியர்கள், நேபாளம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்நதவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவன ஊழியர்களுக்காக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் 50 பேருடன் ஒரு பேருந்து நிறுவனத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது வழியில், ஒரு டேங்கர் லாரியுடன் பஸ் மோதிக் கொண்டது. இதில் டேங்கர் லாரியும், பஸ்ஸும் தீப்பிடித்து எரிந்தன. இதில் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். பலர் தீக்காயமடைந்து அலறித் துடித்தனர்.

மீட்புப் படையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். இந்தக் கோர விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பலியான இந்தியர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.