தகவல் அறியும் உரிமை சட்டம் வழிகாட்டி கையேடு
6564565-Thagaval-Ariyum-Sattam-Details.pdf (1,2 MB)
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
எங்கிருந்து தகவல் பெறலாம்?
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள். ஆவணங்கள், சுற்றறிக்கைகள். ஆணைகள், ஈமெயில்கள், நோட் பைல் எனப்படும் அலுவலக குறிப்புகள் ஆகியவை பெறலாம். இது தவிர சாலை போடுதல், அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மாதிரிகள் கேட்டுப் பெறலாம்.
ஒரு தகவல் பெறுவதற்கென தனியான படிவம் ஏதும் கிடையாது. ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் வேண்டிய தகவல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசும். தமிழ்நாடு அரசும் தகவல் பெற ரூ.10/- என கட்டணம் நிர்ணயித்துள்ளன. இக்கட்டணத்தை ரொக்கமாகவோ, வரைவேலையாகவோ, நீதிமன்ற கட்டண வில்லை மூலமாகவோ செலுத்தலாம். நகல் பெறுகையில் ஒரு தாளுக்கு ரூ. 2/- எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொதுத் தகவல் அலுவலர்களின் மத்திய அரசுக்கான பட்டியல் www.tn.gov.in என்ற தளத்திலும் உள்ளன.
பிரிவு 6 (2)ன்படி தகவல் கேட்பவர் எதற்காக தகவல் கேட்கப்படுகிறது என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. பதில் அனுப்ப ஒரு தொடர்பு முகவரியைத் தவிர வேறு எந்த விபரத்தையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
பிரிவு 7 (1)ன் படி ஒரு பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தர வேண்டும். கேட்கப்படும் தகவல் ஒரு நபரின் உயிர்ப்பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி நேரத்தில் தர வேண்டும்.
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம்.
மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.
273/378, அண்ணாசாலை, (வானவில் அருகில்),
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
போன் : 044-24357580, 24312841, 24312842
பிரிவு 20ன் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள், உரிய நியாயமான காரணங்கள் எதுவுமின்றி தகவல் தர மறுத்தாலோ, தவறான தகவல் அளித்தாலோ அரைகுறையான முழுமையற்ற தகவல்கள் அளித்தாலோ, தகவல்களை அழித்தாலோ பிரிவு 20ன் கீழ் அதிகபட்சமாக ரூ.25,000/- அபராதம் மற்றும் துறை நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.
பிரிவு 8ன் படி நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கும், சட்டமன்ற, பாராளுமன்ற உரிமைகள் மீறும், வியாபார ரகசியங்கள், வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு வந்த ரகசியங்கள், காவல் துறையின் ரகசிய தகவலாளர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்கள், புலனாய்வில் உள்ள வழக்குகள், அமைச்சரவை கூட்ட குறிப்புகள் போன்றவை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் பிரிவு 24ன் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பட்டியலிடப்படும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை நிறுவனங்கள் ஆகியன இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இச்சட்டத்தை பயன்படுத்திட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிமேம்பாடு நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கேட்கலாம். நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வழங்கப்படும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது எனக் கேட்கலாம். ஊழல் நடைபெறக் கூடும் என்று சந்தேகப்படும் அலுவலகங்களில் தகவல் கேட்கலாம். உங்கள் தெருக்களில் போடப்படும் சாலைகளிலோ அரசு கட்டுமானப் பணிகளிலோ மாதிரிகள் எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம். டெண்டர் விபரங்களைக் கேட்கலாம்.
தகவல் கேட்பவரை மிரட்டுவது சில நேரங்களில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக காவல் துறையினரிடம் தகவல் கேட்கையில் இது போல் நிகழும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நேர்ந்தால், எந்த தகவலை கேட்கையில் மிரட்டல் வந்ததோ, அதே தகவலை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து நண்பர்களையோ உறவினர்களையோ, அதே தகவலை கேட்டு பல விண்ணப்பங்களை அனுப்பச் செய்யுங்கள். இது மிரட்டலை நிச்சயம் நிறுத்தும். இதையும் மீறி மிரட்டல் தொடர்ந்தால் வழக்கறிஞர்களை அணுகவும்.
வரலாற்றுப் பின்னணி :
எல்லா சட்டங்களையும் போல தகவலறியும் உரிமைச் சட்டத்திற்கும் ஒரு சிறப்பான வரலாறு உண்டு. நியாயமான உரிமைகளை சட்டரீதியாக நிலைநாட்டிக் கொள்ள முயன்ற ஒரு சிறு மக்கள் குழுமத்தின் உத்வேகமான முயற்சியும் இந்த தகவலறியும் உரிமைச் சட்டம் உருவாகக் காரணமானது. வரலாறு சுட்டிக்காட்டும் ஒரு உண்மை என்னவென்றால், மக்களுக்கு ஒரு அரசு தகவல் தர மறுப்பது அதன் மோசடித் தன்மையையே காட்டுவதாகும். அது ஒரு சட்டப் புறம்பான நடவடிக்கையும் கூட. இந்த வரலாறு பன்னெடுங்காலமாக ஆட்சியாளர்கள் தகவல் தராமல் மக்களை ஏமாற்றி மோசடி செய்து வந்ததை அம்பலப்படுத்துகிறது.
அகில உலக அளவில்
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்த நாட்டில் “ஹேட்ஸ் மற்றும் கேப்ஸ்” என்ற 2 முக்கிய அரசியல் கட்சிகள்தான் பிரதான கட்சிகள். நீண்ட காலம் ஆட்சியிலிருந்த “ஹேட்ஸ்” கட்சி இரும்புத்திரை நடவடிக்கைகளில் “கேப்ஸ்” கட்சி 1765ல் நடைபெற்ற தேர்தலில் வெளிப்படையான நிர்வாகம் என்பதை முன்னிறுத்தி களம் இறங்கியது. ஆட்சியைக் கைப்பற்றியவுடன் தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பிறப்பித்தது.
1. அகில உலக மனித உரிமைப் பிரகடனத்தின் 21 (3) பிரிவு தகவல் பெறுவது மனிதனின் அடிப்படை உரிமை என்பதை பிரகடனப்படுத்தியது.
2. 23.03.1966 ல் அகில உலக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட குடிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த உடன்படிக்கையின் 19 ஆவது பிரிவு தகவல் பெறும் உரிமையை மனிதர்களின் அடிப்படை உரிமையாக அறிவிக்கிறது.
3. நம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தகவல் அறியும் உரிமை பற்றி குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும், பிரிவு 19 (1) (அ), ஆறு வகையான உரிமைகளைப் பட்டியலிடுகிறது. அதை நமது மக்களின் மகா சாசனம் என்று கூட அழைக்கிறார்கள். அதில் சொல்லப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது எதையும் அறிந்து கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.
4. மேலும் 1980 களில் இருந்து பல உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் தகவல் அறியும் உரிமையானது குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்லாந்து 1951 லும், டென்மார்க் மற்றும் நார்வே நாடுகள் 1971 லும், அமெரிக்க ஜக்கிய நாடு 1966 லும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தன. (அமெரிக்க ஐக்கிய நாட்டில் தண்டணை வழங்கும் பிரிவானது 1974 ல் தான் இணைக்கப்பட்டது), 1970 களில் ஆஸ்திரியா, பிரான்சு மற்றும் நெதர்லாந்து நாடுகளிலும், 1980 களில் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியுசிலாந்து நாடுகளிலும் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தாய்லாந்தில் 1997 லும், அயர்லாந்தில் 1998 லும் இந்தச்சட்டம் நடைமுறைக்கு வந்தது. பல்கேரியா நாட்டில் 2000 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனது நாட்டு குடிமக்களுக்கு எந்தவிதமான தகவலையும் பெறுவதற்கான உரிமையை வழங்கியதோடு, சமூக வாழ்வு தொடர்பான எந்தத் தகவலையும் நாட்டின் குடிமக்கள் மட்டுமின்றி ஏனையோரும் தெரிந்து கொள்ள உரிமை வழங்கியது.
தென் ஆப்பிரிக்கக் குடியரசில்தான் முதன்முதலாக 2000 ஆம் ஆண்டில் அரசுத்துறைகள் மட்டுமின்றி தனியார் துறைகளும், தனியார் அமைப்புக்களும் தகவல்களை மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்புக்குள்ளாக்கப்பட்டன. சப்பான் அரசு மக்களின் சமூக வாழ்வு குறித்த செயல்பாடுகளில் அரசை கூடுதல் பொறுப்புக்குள்ளாக்குவதாக இச்சட்டத்தை இயற்றியிருந்தது.
இந்தியாவில் தகவல் பெறுவதற்கான உரிமை என்பது குறித்து முதன் முதலில் அவசரச்சட்டம் அமலில் இருந்த 1975 – 77 களில் உணரப்பட்டது. 1977-ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளிப்படையான அரசு நிர்வாகம் என்ற கருத்தை வலியுறுத்தி தேர்தலை சந்தித்தது. அரசின் உளவுத்துறை அமைப்பையும், அரசு அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்த மாட்டோம் என்பதை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்தித்தது. மக்கள் விழித்துக் கொண்டனர். ஒரே கட்சி ஆட்சிக்கு முடிவுரை எழுதினர். வெற்றி பெற்ற பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு உடனடியாக இரகசியப் பாதுகாப்புச் சட்டம், 1923 ல் மாற்றங்கள் கொண்டு வந்து மக்களுக்கு அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டி ஒரு குழுமை நியமித்தது.
ஆட்சி அதிகாரத்தை சுவைக்கப் பழகிக் கொண்ட அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் மாற்றத்தை விரும்பவில்லை. தகவல் பெறும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டால் தங்களின் சுரண்டல் நடவடிக்கைகளும், தாங்கள் செய்துவரும் முறைகேடுகளும் வெளிப்பட்டு விடுமே என்று எண்ணினர். எனவே அந்த முயற்சியை தடுத்தனர். சனதா அரசின் நிர்வாகம் தான் சொன்னதை நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் நம்பிக்கையை இழந்தது சனதா அரசு.
அடுத்த முயற்சி போபர்ஸ் பீரங்கி ஊழலைத் தொடர்ந்து
1989 ல் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய முன்னணி ‘வெளிப்படையான அரசு நிர்வாகம்’ என்ற கருத்தை மையமாக வைத்து தேர்தலை சந்தித்தது. வெற்றி பெற்றவுடன் வி.பி.சிங் நாட்டு மக்களுக்கான முதல் செய்தியில் ‘இரகசிய பாதுகாப்புச் சட்டம், 1923 ல் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும், தகவலறியும் உரிமை அனைவருக்குமானதாக ஆக்கப்படும் என்றும் முன்னறிவித்தார். ஆனால், அதிகார வர்க்கம் மிகச் சாதுர்யமாக அவருடைய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைப் போட்டது. வி.பி.சிங் அரசும் கவிழ்க்கப்பட்டது.
2000 ல் தேசிய சனநாயக கூட்டணி சனதா கட்சி மற்றும் தேசிய முன்னணி ஆகியவற்றைப் போலவே வெளிப்படையான நிர்வாகம் என்பதை முன்வைத்து தேர்தலைச் சந்தித்து ஆட்சியைக் கைப்பற்றியது. தகவல் சுதந்திரச் சட்டம், 2000 யை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால், மீண்டும் அதிகார வர்க்கம் ஆளும் கும்பலுடன் இணைந்து கொண்டு 2 ஆண்டுகள் அதை நடைமுறைக்குக் கொண்டுவராமல் தடுத்து வந்தன. எனவே அந்தச்சட்டம், இரண்டு ஆண்டுகள் கழித்துதான் 2002 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டது. 2003 ஆம் ஆண்டு சனவரி 6 ஆம் நாள் சனாதிபதி அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். அந்தச் சட்;டம் பல ஓட்டைகளைக் கொண்டிருந்தது. சமூக அக்கறையுள்ளவர்கள் பலரும் தொடர்ந்து அதிலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதை திருத்த பல முயற்சிகள் எடுத்தனர்.
1. மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்துக்குத் தடை
2. தகவல் தர மறுக்கும் அதிகாரிகளுக்கும், தவறான தகவல் தருவோருக்கும் தண்டணை இல்லை.
3. மேல்முறையீட்டுக்கும் வழியில்லை.
இத்தகைய குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி திருத்தம் செய்ய வலியுறுத்தியவர்களில் மிக முக்கியமானவர்கள் அருணாராய், சங்கர்சிங் மற்றும் நிகில்தேவ் ஆகியோராவர். அவர்கள் தங்கள் நேரடி அனுபவத்தின் அடிப்படையில் அரசுக்கு பல பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். இன்று நாம் பெற்றிருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, 15.06.2005 ல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு, 20.06.2005 ல் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 12.10.2005 ல் நடைமுறைக்கு வந்தது
நமது நாட்டில் தற்போதுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான வித்து 1987 ஆம் ஆண்டில் முதன் முதலாக இராசசுதான் மாநிலத்தில் உள்ள தென்துங்கரி என்ற குக்கிராமத்தில் விதைக்கப்பட்டது. வறுமை, வறட்சி, சுரண்டல், வசதியின்மை, அக்கிராமத்தில் தான் 3 சமூக ஆர்வலர்கள்; ஐ.ஏ.எஸ். ஆதிகாரியான அருணாராய், (1975 ல் பதவியிலிருந்து விலகி சமூகப் பணியில் முழுமையாக ஊடகத்துறையில் பணியாற்றிய சங்கர்சிங். அமெரிக்காவில் மேலாண்மை பட்டப்படிப்பில் நிகில்தேவ் என்ற சமூக அக்கறையுள்ள மிகவும் துடிப்பான ஒரு இளைஞர். இவர் தன்னுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தக் குழுவோடு இணைத்துக் கொண்டவர். இவர்கள் மூவரும், 1987 ஆம் ஆண்டு தங்களுக்கென்று ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டனர்.
மேற்சொன்ன தென்துங்கிரி கிராமத்தில் அடித்தட்டு மக்களோடு ஒரு சிறு குடிசை அமைத்து வாழ ஆரம்பித்தனர். அந்த கிராம வாழ்க்கையை அப்படியே தங்கள்வயப்படுத்திக் கொண்டனர். மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, சரியான உணவு இல்லை, வாகன வசதிகளில்லை. ஏன் சாலைகளே இல்லை, தொலைபேசியும் இல்லை.
அந்த தென்துங்கிரி கிராமம் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டதோடு வறட்சிக்கும் பெயர்போன கிராமமாகும். பண்படுத்தப்படாத நிலம், தண்ணீரையே ஒருபோதும் காணாத பூமி, எப்போதும் கோடைக்காலத்தில் மக்கள் நகர்புறங்களுக்கு கூலி வேலை தேடி செல்வது வாடிக்கை.
அரசின் தலையீடு என்பது சாலை அமைத்தல், தண்ணீர்த் தொட்டிகள் அமைத்தல் போன்ற அளவில் அரைகுறையாகவே இருந்தது. மக்கள் பிழைக்க வழியின்றி இருந்தனர். சமூகப்பாதுகாப்பு என்பது முற்றிலும் இல்லாத நிலை. கல்வியறிவு ஆண்களில் 26 சதவிகிதமும், பெண்களில் வெறும் 1.4 சதவிகிதமும் தான். ஒவ்வொரு குடும்பமும், கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கித் தவித்தது. கடன்தொல்லை மற்றும் வறுமை காரணமாக பலரும் தற்கொலை செய்து கொண்ட அவலம்.
சங்கமாக மக்கள் இணைந்தனர். பலவிதமான கூட்டங்கள் கூட்டி பொதுவாக விவாதித்தனர். தெளிவு பெற்றனர். எல்லாக் கேள்விகளுக்கும் தங்களிடமே விடை இருக்கின்றது என்பதை கண்டுபிடித்தனர். இறுதியில் மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதன் என்ற அமைப்பை நிறுவி தங்கள் உரிமைகளைக் கேட்க கற்றுக் கொண்டனர்.
ஜன் சன்வாய் எனப்படும் பொது விசாரணைகளை நடத்த மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதன் ஏற்பாடு செய்தது. இந்தப் பொது விசாரணைகள் மக்களை மேலும் விழிப்படைய வைத்தன. பொது விசாரணைகளின் போது அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதிகாரிகளுக்கு இத்தகைய பொது விசாரணைகள் பெரும் தலைவலியாக மாறியது. பொது விசாரணைகளைச் சந்திக்க அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் படாத பாடுபட்டனர். தென்துங்கிரி கிராமத்தில் ஏற்பட்ட விழிப்புநிலையைக் கண்டு சுற்றியுள்ள கிராமத்தினரும் விழித்துக் கொண்டனர். எல்லா கிராமங்களுக்கும் சங்கத்தின் செயல்பாடுகள் பரவியது. சங்கத்தில் ஏராளமானோர் உறுப்பினர்களாயினர். 1994 ஆம் ஆண்டு இறுதியில், சங்கத்தின் பொது விசாரணைகளுக்கு மாநிலம் முழுவதும் மகத்தான வரவேற்பு கிட்டியது. மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதன் என்ற சங்கம் மாநிலம் முழுவதும் அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பாக உருவெடுத்தது.
இதற்கிடையில், சங்கம் 1992 இல் தமது உறுப்பினர்களிடமிருந்து சிறிய அளவில் வட்டியில்லாக் கடன்பெற்று ஆங்காங்கே பொது விநியோகக் கடைகளை நிறுவினர். தரமான பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்தனர். கணக்கு வழக்குகள் அனைவருக்கும் பொதுவில் வைக்கப்பட்டது. அதே வழிமுறையைப் பின்பற்றி வரி செலுத்துகின்ற மக்களுக்கு அரசு அதிகாரிகளும் ஆள்வோரும் அரசின் திட்டங்களுக்கும், வரவு செலவுகளுக்கும் பொறுப்புக்குரியவர்கள் என்பது மிக எளிதாக விளங்கியது.
இப்படி படிப்படியாக அரசின் செயல்பாடுகளை உன்னிப்பாக கன்காணிக்கக் கற்றுக் கொண்டனர். தாங்கள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றோம், தங்களின் ஆவணங்கள் மக்களால் பார்வையிடப்படுகின்றது என்ற எண்ணமே அரசு அதிகாரிகளையும், அரசு எந்திரத்தையும் கவனமுடனும் பொறுப்புடனும் செயல்பட வைத்தது.
சங்கத்தின் மகத்தான பணிகள் மக்களிடம் கூடுதலாக நம்பிக்கையைப் பெற்றுத் தந்தது. சங்கம் நீதி நியாயத்திற்காக சளைக்காமல் குரல் கொடுக்க அஞ்சவில்லை. அனைத்து மட்டங்களிலும் சங்கம் அங்கீகாரம் பெற்றது. பல்வேறுபட்ட தொழிலாளர்களுக்கும் நியாயமான ஊதியத்தைப் பெற்றுத் தருவதில் சங்கம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. 3 வழிகாட்டிகளும் அவர்களோடு தோள் கொடுத்து நின்றனர். அருணாராய் தொடர் சமூக செயல்பாடுகளின் மூலம் மக்களுக்கு சக்தி பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் அரசு
அரசு நிர்வாகத்தில் மக்கள் வெறும் பார்வையாளர்கள் என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அரசு நிர்வாம் தங்கள் விருப்பம்போல எதையும் செய்யலாம் என்ற நிலை முற்றிலுமாக மாறியது. அரசு அதிகாரிகள், திட்டக்குழுவினர் மக்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கும் நிலை உருவாக்கப்பட்டது. அரசின் செயல்பாடுகளில் முழுமையாக மக்கள் நேரடியாகத் தலையிடும் உரிமையை சங்கம் பெற்றுத் தந்தது. அரசின் செயல்பாடுகளில் வெறும் பார்வைகளாகயிருந்து வந்த மக்கள் பங்கேற்பாளர்களாகிப் போனார்கள்.
ஒரு சிறு கிராமத்தில் ஏற்பட்ட தாக்கம் முதலில் பல மாவட்டங்களுக்கும் பிறகு மெதுவாக பல மாநிலங்களுக்கும் பரவியது. இன்றும் மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதன் என்ற அமைப்பு வட மாநிலங்களில் ஒரு மகத்தான அடித்தட்டு மக்களின் இயக்கமாக விளங்குகிறது.
மாநிலங்கள் அளவில் மாநில அளவில் பல மாநில சட்டமன்றங்களிலும் தகவல் உரிமையை அடிப்படை உரிமை ஆக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. 1997 ஆம் ஆண்டு முதல் முதலில் இந்தச் சட்டத்தை அமலாக்கிய பெருமை தமிழ்நாட்டுக்கும், கோவா ய+னியன் பிரதேசத்திற்குமே சேரும். 1997 ல் தமிழ்நாடு அரசு இயற்றிய இந்தச் சட்டத்தில் தகவலைப் பெறுவதற்கு தடையாக 20 க்கும் மேற்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. எனவே அது பயனற்ற சட்டமாகவே இருந்தது.
அதன் பிறகு கர்நாடகா, உத்திரப் பிரதேசம், மற்றும் இராசசுதான் அரசுகள் 2000 லும், அசாம், டெல்லி மற்றும் ஆந்திர அரசுகள் 2001 லும், கேரளா, ஒரிசா, மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகள் 2002 லும் இந்தச் சட்டத்தை வௌ;வேறு வடிவங்களில் கொண்டு வந்தன. மகாராஷ்டிர மாநில அரசின் சட்டம் பல முற்போக்கு அம்சங்களைக் கொண்டிருந்தது. தகவல் தர மறுக்கும் அதிகாரிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 250 அபதாரம் என்றும், தவறாக தகவல் தரும் அதிகாரிக்கு ரூ. 2000 அபராதம் என்றும், மனித உரிமை மற்றும் மனித உயிர் தொடர்பான தகவல்களை மனு செய்த 24 மணி நேரத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் பல சிறப்பு உரிமைகளை உள்ளடக்கியதாக இருந்தது.
இச்சூழலில், 2005 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் நாட்டு மக்களுக்கு தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக கிடைக்கப்பெற்ற மாபெரும் ஆயுதமாகும்.