திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்!...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

08/10/2012 21:32

வரு முன் உரைத்த இஸ்லாம்

கடந்த 2003.ஆம் ஆண்டு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புக்கள் என்ற தலைப்பில் ரமளான் முழுவதும் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
 
அந்த உரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் வகையில் அமைந்தது. தனியார் தொலைக்காட்சியிலும் சஹர் நேரத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
 
அந்த உரையில் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதை விட முக்கியமான அறிவியல் உண்மைகளும், எதிர்கால நிகழ்வுகள் பற்றிய முன்னறிவிப்புகளும் திருக்குர்ஆனில் ஏராளம் உள்ளன. எனவே அவற்றையும் தொகுத்து நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகளுடன் இணைத்து வெளியிட்டுள்ளோம்.
 
இஸ்லாம் இறைவன் வழங்கிய மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக திருக்குர் ஆனும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் முன்னறிவிப்புக்களும் அமைந்துள்ளன என்பதை பின் வரும் தலைப்புகளில் இந்நூல் தெளிவுபடுத்துகிறது.  
 
திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்!

அறிவியல் கண்டு பிடிப்புகள்

1 பெருவெடிப்புக் கொள்கை
2 திருப்பித் தரும் வானம்
3 விண்வெளிப் பயணம் சாத்தியமே
4 முகடாக வானம்
5 பூமியில் தான் வாழ முடியும்
6 புவி ஈர்ப்பு சக்தி
7 முளைகளாக மலைகள்
8 ஓரங்களில் குறையும் பூமி
9 பூமியைத் தொட்டிலாக
10 பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழத்திற்குச் செல்ல முடியும்?
11
நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது
12 இரு கடல்களுக்கிடையே தடுப்பு
13 உதிக்கும் பல திசைகள்
14 மனிதர்களால் குறையும் பூமி
15 ஆழ் கடலில் அலைகள்
16 மலட்டுக் காற்று
17 மாதங்கள் பன்னிரண்டு
18 சூரியனும் கோள்களும் ஓடுகின்றன
19 கருவில் குழந்தையின் வளர்ச்சி
20 கலப்பு விந்துவிலிருந்து மனிதனின் உற்பத்தி
21 ஜோடி ஜோடியாக...
22
விந்தின் பிறப்பிடம்
23 கர்ப்ப அறையின் தனித் தன்மை
24 விரல் ரேகையின் முக்கியத்துவம்
25 பால் எவ்வாறு உற்பத்தியாகிறது
26 தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது
27 நவீன வாகனங்கள்
28 பெருங்கவலை போக்கும் அரு மருந்து
29 வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள்
30 பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன்
31 கஃபா பற்றி முன்னறிவிப்பு
32 மனிதர்களால் நபிகள் நாயகத்தைக் கொல்ல முடியாது
33 பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்
34 நுஹ் நபியின் கப்பல்
35 இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு
36 மக்காவை நபிகள் நாயகம் (ஸல்) வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு
37 பத்ருப் போரில் வெற்றி பற்றிய முன்னறிவிப்பு
38 அபூலஹப் குறித்த முன்னறிவிப்பு
39 பாரசீகம் ரோமாபுரியிடம் தோற்கும்
40 கண்டுபிடிக்கப்பட்ட ஏடு
41 தீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல் 


நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள்

 
1 பாரசீகம் வெற்றி கொள்ளப்படும்
2 தமது மரணம் குறித்து அறிவித்த முன்னறிவிப்பு
3 தனி நபரைப் பற்றி நரகவாசி என்ற முன்னறிவிப்பு
4 தமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு
5 அம்மாரின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு
6 ஸைனப் (ரலி) அவர்கள் மரணம் பற்றிய முன்னறிவிப்பு
7 இரண்டு கலீஃபாக்களின் வீர மரணம் பற்றி முன்னறிவிப்பு
8 ஒட்டகப் போர் பற்றி முன்னறிவிப்பு
9 ஹஸன் (ரலி) மூலம் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை
10 வழிப்பறிக் கொள்ளைகள் தடுக்கப்படும்
11 பாரசீகம் மற்றும் ரோமப் பேரரசின் வீழ்ச்சி பற்றிய முன்னறிவிப்பு
12 யமன் வெற்றிகொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு
13 பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படுதல்
14 எகிப்து வெற்றி கொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு
15 போலி இறைத்தூதர்கள் பற்றிய எச்சரிக்கை
16 ஸம்ஸம் கிணறு பற்றிய முன்னறிவிப்பு
17தனது எஜமானியைத் தானே பெற்றெடுக்கும் பெண்கள் பற்றிய முன்னறிவிப்புகள்
18 ஆடு மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவர்
19 ஆடை அணிந்தும் நிர்வாணம்

பொதுவான முன்னறிவிப்புகள்

முன்னுரை

இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கம் என்று முஸ்லிமல்லாதவர்கள் சிலர் கருதுகிறார்கள்.
 
ஆனால், இஸ்லாம் மார்க்கம் அகில உலகையும் படைத்த இறைவனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழியாக வழங்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்பி வருகின்றனர்.
 
முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக இவ்வாறு நம்புவதில்லை. தக்க காரணங்களின் அடிப்படையில் தான் இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்று நம்புகின்றனர்.
 
இந்த மார்க்கத்தை நிச்சயம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து உருவாக்கியிருக்க முடியாது என்பதற்கு திருக்குர்ஆன் முதன்மையான சான்றாக உள்ளது.
 
எதிர்காலத்தில் நிகழவுள்ள பல செய்திகளைத் திருக்குர்ஆன் முன் கூட்டியே அறிவித்திருப்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் இதை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் கூறியிருக்கவே முடியாது என்ற முடிவுக்கு வருவார்கள்.
 
அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்காலத்தில் நிகழவுள்ள பல நிகழ்ச்சிகளை முன்னரே அறிவித்துள்ளனர். அவர்கள் அறிவித்தவாறு அவை அப்படியே நிறைவேறி வருவதை சிந்திப்பவர்கள்- இதை இறைவன் புறத்திலிருந்து தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்க வேண்டும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வார்கள்.
 
இதைத் தெளிவுபடுத்தும் நோக்கத்தில் வருமுன் உரைத்த இஸ்லாம் எனும் இந்நூலைத் தொகுத்துள்ளேன் இந்நூலை வாசிப்பவர்கள் இஸ்லாம் இறைவனால் அருளப்பட்ட மார்க்கம் என்பதை அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.
இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.
 
இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.
 
நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்; என்னென்ன கண்டு பிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்குக் காரணம்.
 
பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.
 
ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.
 
திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.
 
பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியியல் மற்றும் வானியல் குறித்துப் பேசும் போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.
 
அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் எனப் பல விஷயங்களைக் குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதை விட அழகாகப் பேசுகிறது.
 
தாவரங்களைப் பற்றிப் பேசினாலும், மலைகளைப் பற்றிப் பேசினாலும், நதிகளைப் பற்றிப் பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை.
 
அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பல விஷயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.
 
பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திப்பவர்கள் 'இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்' என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.
 
அறிவியல், நவீன கண்டு பிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விட அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.
 
ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்ட மேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.
 
அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு ஏற்கத்தக்க அற்புதமான தீர்வுகளைக் குர்ஆன் கூறுவதும் இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.
 
குலம், கோத்திரம், சாதி, இவற்றால் ஏற்படும் தீண்டாமை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. இந்தச் சிக்கலான பிரச்சினைக்கும் திருக்குர்ஆன் மிக எளிதான தீர்வை வழங்கி தீண்டாமையை அடியோடு ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
 
எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம்.
 
முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவை யாவும் ஆதாரங்களாக உள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் இப்போது காண்போம்

அறிவியல் கண்டு பிடிப்புகள்

1 பெருவெடிப்புக் கொள்கை

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? திருக்குர்ஆன் 21:30
 
இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்தைய நூல்கள் கூறுகின்றன.
 
திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஒரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
 
இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.
 
இவ்வாறு பிளக்கப்பட்ட பின் முதலில் தூசுப் படலம் உருவானது. பின்னர் அந்தத் தூசுப் படலங்கள் ஆங்காங்கே திரண்டு கோள்கள் உருவாயின என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
இதையும் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். 'விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்' என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். 'விரும்பியே கட்டுப்பட்டோம்' என்று அவை கூறின. திருக்குர்ஆன் 41:11
 
இவ்வசனத்தில் வானம் புகையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன் பிறகு தான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின என்று இப்போது விஞ்ஞானிகள் கூறுவதை 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் கூறி இது இறை வேதம் தான் என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.

2 திருப்பித் தரும் வானம்

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! இது தெளிவான கூற்றாகும். இது கேலிக்குரியதல்ல. திருக்குர்ஆன் :86:11, 12, 13, 14
 
திருக்குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனை அல்ல. மாறாக என்னுடைய கூற்றாகும் என்பதைச் சத்தியம் செய்து இறைவன் கூறுகிறான், வானத்தின் மேல் சத்தியம் செய்து இதைக் கூறும் போது திருப்பித் தரும் வானம் என்ற அற்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
 
வானம் எதைத் திருப்பித் தருகிறது என்றால் ஏராளமான விஷயங்களை நமக்கு திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது.
 
கடலிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக நமக்கு வானம் திருப்பித் தருகிறது.
 
இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது. திருப்பித் தருகின்ற தன்மையை வானம் பெற்றிருக்கின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் ரேடியோ போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகிறது.
 
மேல் நோக்கி அனுப்பப்படும் செய்திகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு திரும்பவும் கீழ் நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன.
 

இன்றைக்கு செயற்கைக் கோள் மூலம் ஒளி பரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன. இங்கேயிருந்து நாம்

 

நூலாசிரியர்: பீ.ஜைனுல்ஆபிதீன் உலவி அவர்கள்.